குழந்தை பராமரிப்பு

வாசிப்பு பழக்கம்... ஏன் அவசியம்?

Published On 2024-08-19 09:18 GMT   |   Update On 2024-08-19 09:18 GMT
  • வாசிப்பு பழக்கத்தை வழக்கமாக்கும்போது புதிய புதிய சொற்கள், வார்த்தைகளை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.
  • புத்தகம் வாசிப்பது மனதளவில் நெருக்கமாக உணர வைக்கும்.

இன்றைய டிஜிட்டல் யுகம் பொழுதுபோக்குக்கான அத்தனை அம்சங்களையும் கொண்டிருப்பதால் பலரும் அதிலேயே மூழ்கி நேரத்தை பாழ்படுத்திக்கொள்கிறார்கள். அதனால் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. வாசிப்பு பழக்கத்தை வாழ்வின் ஒரு அங்கமாக பின்பற்ற வேண்டும் என்பது கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது. அதற்காக காரணங்கள் குறித்தும், வாசிப்பு பழக்கம் ஏன் அவசியமானது என்பது குறித்தும் பார்ப்போம்.

அறிவை அளிக்கும்

ஒவ்வொரு புத்தகங்களில் இடம் பெறும் தலைப்பும் ஏதோ ஒரு வகையில் கற்பனை செய்து பார்க்கக்கூடிய பரந்த அளவிலான அறிவை வழங்குகின்றன. அறிவியல், வரலாறு, தத்துவம் பற்றிய புத்தகங்களை படிக்கும்போது அவை சார்ந்த விஷயங்களை ஆழமாக ஆராய்ந்து பார்க்கும் ஆர்வத்தை வளர்த்தெடுக்கும். அது சார்ந்த தேடலில் மனதை ஈடுபட வைக்கும்.

சொற்களஞ்சியம்

வாசிப்பு பழக்கத்தை வழக்கமாக்கும்போது புதிய புதிய சொற்கள், வார்த்தைகளை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும். தகவல் தொடர்பு திறனையும், புரிதலையும் மேம்படுத்தும்.

அழுத்தம்

புத்தகம் வாசிப்பது மனதளவில் நெருக்கமாக உணர வைக்கும். நாவல், கதை போன்றவற்றை வாசிக்கும்போது அதில் இடம் பெறும் கதாபாத்திரங்கள் மனதோடு பேசும் உணர்வை ஏற்படுத்திக்கொடுக்கும். மனக்கவலைகளில் இருந்து தற்காலிகமாக விலகி இருக்க வைக்கும். தேவையற்ற சிந்தனைகளுக்கு இடம் தராமல் மனதை இலகுவாக்கும். மன அழுத்தத்தில் இருந்தும் விடுவிடுக்கும். வாசித்து முடித்த பிறகு மனத்தெளிவை ஏற்படுத்திக்கொடுக்கும். மனம் ஓய்வெடுக்கவும் வழிவகை செய்யும்.

கவனிக்கும் திறன்

இன்றைய அவசர உலகில் கவனச்சிதறல் காரணமாக சின்ன சின்ன வேலைகளை கூட சரியாக முடிக்க முடியாமல் பலரும் தடுமாறுகிறார்கள். வாசிப்பு மீது கவனத்தை பதிக்கும்போது தேவையற்ற கவனச்சிதறல்களை தடுக்க முடியும். கவனத்தை ஒரு இடத்தில் குவிக்கும் திறன் மேம்படும்.

நினைவாற்றல்

நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை கூர்மைப்படுத்தவும் வாசிப்பு பழக்கம் உதவும். மனதை சுறுசுறுப்பாகவும், ஈடுபாட்டுடனும் வைத்திருக்க உதவும் என்று ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

படைப்பாற்றல்

வாசிப்பு பழக்கம் புதிய யோசனைகள் மற்றும் சிந்தனைகளை மெருகேற்ற வழிவகை செய்யும். படைப்பாற்றல் திறனையும் அதிகரிக்க செய்யும். எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் சிக்கலை தீர்ப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து செயல்பட ஊக்கப்படுத்தும்.

எழுத்தார்வம்

புத்தகம் வாசிக்கும்போது அதில் இடம்பெறும் எழுத்து நடை, வாக்கிய அமைப்பு போன்றவற்றை படிக்கும்போது அதுபோன்று எழுதும் ஆர்வம் மேலோங்கும். ஒட்டுமொத்த தகவல்தொடர்பு திறனையும் மேம்படுத்தும். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதற்கான ஆவலை தூண்டும்.

தூக்கம்

தூங்குவதற்கு முன்பு செல்போன் திரையில் பொழுதை போக்குவதற்கு பதிலாக சில நிமிடங்கள் புத்தகம் வாசிப்பது மனதை அமைதிபடுத்தும். உடலையும், உள்ளத்தையும் ஓய்வெடுப்பதற்கு தயார்படுத்தும். அதில் இடம்பெற்றிருக்கும் நல்ல கருத்துக்களை படிக்கும்போது மனம் ஆனந்தம் கொள்ளும். நன்றாக தூங்குவதற்கான சூழலையும் ஏற்படுத்திக்கொடுக்கும்.

புதிய உலகம்

புத்தகத்தில் இடம் பெற்ற சம்பவங்கள், கதாபாத்திரங்களுடன் நம்மையும் பயணிக்க வைத்து வெவ்வேறு இடங்களுக்கு அழைத்து செல்லும். புதிய உலகத்திற்குள்ளும் நுழைய வைக்கும். சிலிர்ப்பூட்டும் சாகச இடங்கள், வரலாற்று நிகழ்வுகள், பயணங்களுக்குள் நம்மையும் பயணிக்க வைத்துவிடும்.

கற்றல்

வாசிப்பு என்பது தொடர்ச்சியான கற்றல் அனுபவத்தை கொடுக்கும். வயது, ஆர்வத்தை பொருட்படுத்தாமல், எப்போதும் புதிதாக ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ள தூண்டிக்கொண்டே இருக்கும். மற்றவர்களுடன் எந்தவொரு தலைப்பிலும் துணிச்சலாக கலந்துரையாடுவதற்கான தகுதியை வளர்த்தெடுக்கும்.

Tags:    

Similar News