லைஃப்ஸ்டைல் (Health)

வயிற்று தொல்லைகளை போக்கும் பிரண்டை துவையல்

Published On 2016-06-29 04:54 GMT   |   Update On 2016-06-29 04:54 GMT
பசியை தூண்டுற சக்தி பிரண்டை செடிக்கு உண்டு. வாந்தி வரும் உணர்வு, அடிக்கடி ஏப்பம் விடுவது, இந்த தொல்லையெல்லாம் பிரண்டை துவையல் செய்து சாப்பிட்டால் பறந்து போயிடும்.
தேவையான பொருட்கள் :



பிரண்டை - ஒரு கட்டு
மிளகாய் வற்றல் - 5
புளி - சிறிதளவு
தேங்காய் - 1 பத்தை
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - 2 ஸ்பூன்

தாளிக்க :

கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு.

செய்முறை :

* பிரண்டையின் நரம்புகளை எடுத்து விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.



* தேங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு பிரண்டையை அதில் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் மிளகாய் மிளகாய் வற்றல், புளி, உளுத்தம் பருப்பு, தேங்காய், அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும்.

* வதக்கிய அனைத்தையும் ஆறவைத்து மிக்சியில் போட்டு தேவையான உப்பு, பெருங்காயம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவும்.

* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை உளுந்து போட்டு தாளித்து அரைத்த பிரண்டை துவையலில் கொட்டி பரிமாறவும்.

* சத்தான பிரண்டை துவையல் ரெடி.

பி.கு:- பிரண்டையை நன்கு வதக்கவில்லை என்றால் நாக்கு அரிப்பு எடுத்து விடும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News