செய்திகள் (Tamil News)

கோவையில் வானதி சீனிவாசனிடம் ஐ லவ் யூ சொன்ன வாலிபர்

Published On 2016-09-17 11:10 GMT   |   Update On 2016-09-17 11:45 GMT
பா.ஜனதா கட்சி சார்பில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா கோவையில் நடந்தது. அப்போது வானதி சீனிவாசனிடம் வாலிபர் ஒருவர் ஐ லவ் யூ சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.

பா.ஜனதா கட்சி சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா கோவையில் நடந்தது. இதையொட்டி கோவை கோணியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். இதில் திரளான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது வானதி சீனிவாசனுடன் கட்சி தொண்டர்கள் சிலர் போட்டோ எடுத்தனர்.

அந்த சமயத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் வந்தார். அவர் வானதி சீனிவாசன் அருகே வந்து உங்களுடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதனால் அவரும் கட்சி தொண்டர் என நினைத்து புகைப்படம் எடுக்க அனுமதித்தார். அப்போது திடீரென அந்த வாலிபர் ,வானதி சீனிவாசனிடம் கைகுலுக்கி ‘‘ஐ லவ் யூ’ என்று கூறினார்.

இதை கேட்டு வானதி சீனிவாசனும், கட்சி நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த வாலிபரை பிடித்து உக்கடம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில் இந்த வாலிபர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த வாலிபர் முத்துவேல் (வயது 25) என தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News