நாளை மறுநாள் நடைபெறும் ரெயில் மறியல் போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு: சீமான் பேட்டி
மயிலாடுதுறை:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் கூட்டியக்கம் சார்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
நாளை மறுநாள் நடைபெறும் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி பங்கேற்கும். கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்கள் தங்கள் வளத்தை தாங்களே வைத்து கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். தமிழகமும் அதே போல் நினைக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழக அரசு சட்டரீதியாக வெற்றி பெற்றாலும் இதில் மத்திய அரசு அலட்சியம் காட்டுகிறது.
காவிரி பிரச்சினை தொடர்பாக தி.மு.க.- காங்கிரஸ் கட்சியினர் தற்போது போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் மத்தியில் ஆட்சியில் இருந்த போது காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து இருக்கலாமே?
தற்போது போராட்டம் நடத்துவது மக்களை ஏமாற்றும் வேலையாகும். பண்டிகை காலம் நெருங்குவதால் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையை அரசு உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக முதல் -அமைச்சர் விரைவில் குணம் அடைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.