செய்திகள்

விவசாயிகளின் நலன் பேணும் வகையில் அ.தி.மு.க. அரசு விளங்குகிறது- முதலமைச்சர் பேச்சு

Published On 2018-05-11 07:53 GMT   |   Update On 2018-05-11 07:53 GMT
விவசாயிகளின் நலன் பேணும் அரசாக அ.தி.மு.க. அரசு தொடர்ந்து விளங்கும் என்று திருமங்கலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #TNCM #Edappadipalanisamy
மதுரை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவில்பட்டியில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்தார்.

மதுரை விமான நிலையத்தில் அவரை, அமைச்சர் செல்லூர் ராஜூ, கலெக்டர் வீரராகவராவ் மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதைத் தொடர்ந்து கார் மூலம் எடப்பாடி பழனிசாமி கோவில்பட்டிக்கு புறப்பட்டார்.

கோவில்பட்டி செல்லும் வழியில் திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஏராளமான பெண்கள் பூரண கும்ப மரியாதையுடன் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

வரவேற்பை பெற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்குள்ள தேவர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

திருமங்கலத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, சரவணன் எம்.எல்.ஏ. உள்ளனர்.

ஜெயலலிதா பேரவை சார்பில் பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான விவசாயிகள்-பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

மறைந்த முதல்- அமைச்சர் அம்மா வழியில் இந்த அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலமாக உருவாகி வருகிறது.

கல்வித்துறையில் அம்மா எடுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையின் காரணமாக தமிழகம் சிறந்து விளங்குகிறது. எதையும் கேட்டு வாங்கி விடலாம். ஆனால் கல்வியை கேட்டு வாங்கி விட முடியாது. அந்தந்த பருவங்களில் அதை பெறுவதுதான் கல்வி. பருவங்கள் தவறி விட்டால் உரிய கல்வியை பெற முடியாது.

ஏழை மாணவ, மாணவிகளின் நலனை பேணும் வகையில் அம்மா இலவச மடிக்கணினி மற்றும் சீரூடைகள் வழங்கினார்.

இந்த திட்டத்தில் தமிழகத்தில் 36 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடிசையில் இருக்கும் மாணவர்கள் கூட உலக அறிவியலை பெற முடிகிறது.

விவசாயிகளின் நலன் காக்கும் அரசாகவும் அம்மாவின் அரசு திகழ்ந்து விளங்குகிறது. கிராமப்புற விவசாயிகள் தான் கடுமையாக உழைக்கக்கூடியவர்கள்.

நானும் ஒரு விவசாயி என்ற முறையில் விவசாயிகளின் உழைப்பை நன்றாக அறிவேன். எனவே இந்த அரசு விவசாயிகளின் நலன் பேணும் அரசாக தொடர்ந்து விளங்கும்.

அம்மா அறிவித்த அனைத்து திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். #TNCM #Edappadipalanisamy
Tags:    

Similar News