செய்திகள்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றத்தை நம்புகிறேன்: தினகரன் பேட்டி

Published On 2018-06-23 10:03 GMT   |   Update On 2018-06-23 10:03 GMT
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தை பொறுத்தவரை நான் நீதிமன்றத்தை நம்புகிறேன் என்று தினகரன் தெரிவித்துள்ளார். #18mlasdisqualified #dinakaran #edappadipalanisamy

மதுரை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜனநாயக நாட்டில் போராட்டம் என்பது அறவழியில் நடத்தப்படுவதாகும். மகாத்மா காந்திகூட அறவழியில் போராட்டம் நடத்தியவர்தான்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சுகாதாரகேடு காரணமாக போராட்டம் ஏற்பட்டது. சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள். இவர்கள் என்ன சமூக விரோதிகளா?

தமிழக அரசு காவல் துறை மூலமாக மாநிலம் முழுவதும் அராஜகத்தை கட்டவிழ்த்துள்ளது. மத்திய அரசு, தாய் கோழிக்குஞ்சை பாதுகாப்பது போல தமிழக அரசை காப்பாற்றி வருகிறது.

எங்கள் கட்சிக்காரர்களை தீவிரவாதி போல கைது செய்யும் தமிழக காவல் துறை, எஸ்.வி.சேகரை கைது செய்ய பயப்படுகிறது.

இரண்டு மந்திரிகள் உள்பட எம்.எல்.ஏ.க்கள் சிலர் எங்களிடம் வருவதாக வரும் தகவல் காற்றில் வரும் செய்தியாகும். இதற்கு நான் பொறுப்பல்ல.

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை பொறுத்தவரை தமிழக அரசு முதலில் நில உரிமையாளர்களிடம் பேசவேண்டும். இந்த திட்டத்தால் அவர்களுக்கு பாதிப்பு இல்லையென்றால் தாராளமாக திட்டத்தை செயல்படுத்தலாம். அதற்குள் ஏன் இந்த அவசரம்?

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக அறவழியில் போராடிய நடிகர் மன்சூர்அலிகான், சமூக ஆர்வலர்கள் வளர்மதி, பியூஸ்மானுஷ் ஆகியோரை கைது செய்ததில் என்ன நியாயம் இருக்கிறது?

குட்கா வி‌ஷயத்தில் விரைவில் நீதி வழங்கப்பட வேண்டும். இதற்காக அந்த வழக்கை துரிதப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை.

தமிழக சட்டசபையில் அம்மாவின் படத்தை முனிசிபாலிட்டியில் திறந்து வைத்தது போன்று திறந்து வைத்தனர். இது அம்மாவை இழிவுபடுத்துவது போன்றதாகும். எனவேதான் நான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தை பொறுத்தவரை நான் நீதிமன்றத்தை நம்புகிறேன். கமல்ஹாசன் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரின் விமர்சனம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.

ஆர்.கே. நகர் தேர்தலில் நான் (தினகரன்) தோற்று விடுவேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் சொன்னார். அது நடந்துவிட்டதா என்ன?


விவசாயி மகன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் விவசாயத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மகாத்மா காந்தி உயிரோடு இருந்திருந்து அறவழியில் போராட்டம் நடத்தியிருந்தால் தமிழக அரசு அவரை தேசத்துரோக வழக்கில் கைது செய்திருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக டி.டி.வி. தினகரன் மதுரை கீரைத்துறையில் கொலையுண்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வட்ட செயலாளர் முனியசாமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். #18mlasdisqualified #dinakaran #edappadipalanisamy

Tags:    

Similar News