செய்திகள்

தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

Published On 2018-07-06 08:35 GMT   |   Update On 2018-07-06 08:35 GMT
தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #PonRadhakrishnan

சென்னை:

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-

தூத்துக்குடியில் பயங்கரவாதிகள் தங்களை மூளைச்சலவை செய்ததாக மக்கள் கூறி இருக்கிறார்கள். இங்குள்ள தி.மு.க. உள்ளிட்ட கட்சி தலைவர்களின் மூளை டிரைகிளீனருக்கா போய்விட்டது? மக்களுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

முந்தைய காலங்களில் மத்திய ஆட்சியை கேள்வி கேட்டது உண்டா? மாநில அரசு செயல்பட தவறும் போது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பயங்கரவாதிகளுக்கு சமூக விரோதிகள் என்ற கவுரவம் வேண்டாம். தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக நான் வெளிப்படையாகவே சொல்லி வருகிறேன்.

அவர்கள் ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை. நடவடிக்கை எடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் மகிழ்ச்சி. தேவைப்பட்டால் பயங்கரவாதிகள் மீது மத்திய அரசே நடவடிக்கை எடுக்கும்.


சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் சென்னையில் இருந்து மேற்கு மாவட்டங்களுக்கு வளர்ச்சியை கொடுப்பது. இந்த திட்டம் சேலம், கோவையை தாண்டி இருக்கும் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

இந்த திட்டத்தை எதிர்ப்பதற்கான அடிப்படை நோக்கம் என்பது தமிழகத்தில் தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும். தொழிலாளர்கள் வேலை இழக்க வேண்டும். புது தொழிற்சாலைகள் வரக்கூடாது என்ற எண்ணம் தான்.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் 60 சதவீதம் மேற்கு மாவட்டங்களில் உள்ளது. அந்த மாவட்ட மக்களின் முயற்சியில் இந்த திட்டம் வருகிறது. அதை கெடுக்கும் வகையில் செயல்படுகிறார்கள்.

சில திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற முடியும். சில திட்டங்கள் தாமதமாகலாம். கன்னியாகுமரியில் நாலு வழிச்சாலைக்கு 2003-ல் திட்டமிடப்பட்டது. ஆனால் இப்போதுதான் செயல்படுத்தப்படுகிறது.

மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் கிடப்பில் கிடப்பதற்கு யார் காரணம்? இதைப்பற்றி தி.மு.க.வோ மற்ற கட்சிகளோ பேசுகிறதா? நான் அந்த துறை பொறுப்பில் இருந்தபோது பிரச்சினைகளை அறிந்து மீண்டும் பணிகளை தொடங்கும் நிலைக்கு கொண்டு வந்தேன்.

பா.ஜனதா ஆளும் மாநிலத்தில் 2 தொகுதிகளில் தோற்றதால் கட்சி செல்வாக்கை இழந்து விட்டதாக கூறுவது தவறு. இதுதான் ஜனநாயகத்தை பா.ஜனதா எப்படி கடை பிடிக்கிறது என்பதற்கு அடையாளம். மற்ற மாநிலங்களில் இடைத்தேர்தல் எப்படி நடக்கிறது?

வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் எத்தனை கட்சிகள், எத்தனை வியூகங்கள் அமைத்தாலும் கடந்த தேர்தலைவிட கூடுதலான இடங்களை பெற்று மீண்டும் மோடி பிரதமராக வருவார்.

இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan

Tags:    

Similar News