தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்: தமிழிசை பேட்டி
மதுரை:
பெருந்தலைவர் காமராஜரின் 116-வது பிறந்த நாளையொட்டி மதுரை விளக்குத்தூண் அருகில் உள்ள அவரது சிலைக்கு பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அளவுக்கு நிர்வாகத்தில் ஊழல் நடந்துள்ளது என்றுதான் அமித்ஷா பேசினார். அது இப்போது வேறு மாதிரி உலா வருகிறது.
பெருந்தலைவர் காமராஜருக்கு பெருமை சேர்ப்பதில் பா.ஜ.க. பெருமிதம் கொள்கிறது.
தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி, வளர்ச்சிப் பாதைக்கு செல்வது அகிய விஷயங்களுக்கு எடுத்துக் காட்டாக திகழ்வது காமராஜர் ஆட்சிதான். எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி, எந்த கட்சியாக இருந்தாலும் சரி, ஊழல் இருக்கக்கூடாது என்பதுதான் பா.ஜ.க.வின் கொள்கை ஆகும்.
தமிழகத்துக்கு மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். மத்தியில் எந்த கட்சி ஆளுகிறதோ, அந்த கட்சியின் சின்னமான தாமரைதான் இங்கு மலரும். தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும். பொருத்திருந்து பாருங்கள்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க. வளர்ச்சிப்பாதையில் செல்கிறது என்பதை அமித்ஷாவின் வருகை உறுதிப்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #tamilisai #amitshah