செய்திகள்
இருசக்கர வாகனங்கள் விற்பனையில் அதிவேகமாக நான்கு கோடி மைல்கல் கடந்து ஹோன்டா அசத்தல்
ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் நான்கு கோடிகளை கடந்துள்ளது. #Honda #motorcycle #scooters
ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் அதிவேகமாக நான்கு கோடிகளை கடந்துள்ளது.
ஸ்கூட்டர்களுக்கான அதிக வரவேற்பு பெற்று வருவதைத் தொடர்ந்து ஹோன்டா நிறுவனம் இந்த மைல்கல் கடக்க 18 ஆண்டுகள் எடுத்துக் கொண்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ஹோன்டா நிறுவன வாகனங்கள் விற்பனை இரண்டு கோடிகளை கடந்துள்ளது.
முன்னதாக 11 ஆண்டுகளில் ஒரு கோடி வாகனங்களையும், அடுத்த மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக ஒரு கோடி யூனிட்கள் விற்பனையை பதிவு செய்தது. ஹோன்டா நிறுவனத்தின் முதல் ஸ்கூட்டர் மாடலாக 2001 ஆம் ஆண்டு ஹோன்டா ஆக்டிவா வெளியானது.
அறிமுகமாகி பல ஆண்டுகளை கடந்தும் ஹோன்டாவின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்றாக ஆக்டிவா மாடல் இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஹோன்டா சி.பி. ஷைன் மாடல் உலகில் அதிகம் விற்பனையாகும் 125சிசி மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை பெற்று இருப்பதாக ஹோன்டா தெரிவித்துள்ளது.
உலகம் முழுக்க இதுவரை சுமார் 70 லட்சம் ஹோன்டா சி.பி. ஷைன் யூனிட்கள் இதுவரை விற்பனையாகி இருக்கிறது. ஹோன்டா சி.பி. யுனிகார்ன் 159 இதே காலத்தில் அறிமுகமாகி இன்றுவரை பிரபலமான மோட்டார்சைக்கிளாக இருக்கிறது. 2009 ஆம் ஆண்டு வாக்கில் ஹோன்டா நிறுவனம் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் எனும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்த முதல் நிறுவனமாக இருக்கிறது.
"குறுகிய காலக்கட்டத்தில் ஹோன்டா பிரான்டு இத்தகைய மைல்கல் பெற்று இருப்பதற்கு நாங்கள் பெருமை கொள்கிறோம். துவக்கம் முதல் ஹோன்டா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும் வகையில் அதிக தரமுள்ள புதுமையான பொருட்களை வழங்கும் நோக்கம் கொண்டுள்ளது" என ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மினோரு காடோ தெரிவித்தார்.