உள்ளூர் செய்திகள் (District)

தஞ்சை மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 1145 கிலோ கஞ்சா அழிப்பு

Published On 2024-08-12 08:34 GMT   |   Update On 2024-08-12 08:34 GMT
  • பல்வேறு வழக்குகளில் சுமார் 1145 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
  • தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் கஞ்சா பொட்டலங்களை தீயில் போட்டு அழிக்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்:

போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டு பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பல ஆயிரம் கிலோ கஞ்சாவை அழிக்கும் நிகழ்ச்சி தமிழகத்தில் 5 மண்டலங்களில் நடைபெற்றது.

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அடுத்த அயோத்திப்பட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கஞ்சா அழிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி, பெரம்பலூர், திருவாரூர், கரூர், அரியலூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 1145 கிலோ கஞ்சாவை, அந்தந்த மாவட்ட போலீசார் மூட்டைகளாக கட்டி வாகனங்கள் மூலம் தொழிற்சாலைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து, அங்குள்ள ராட்சத கொதிகலன்களில் கஞ்சாவை போட்டு போலீசார் முன்னிலையில் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தவாறு பணியாளர்கள் அழித்தனர். தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் கஞ்சா பொட்டலங்களை தீயில் போட்டு அழிக்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.இன்று முதல்கட்டமாக 1145 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது.

பின்னர் போதை பொருளுக்கு எதிரான உறுதி மொழியை காவல் உயர் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.

Tags:    

Similar News