சூலூரில் ஒரே பதிவெண்ணில் இயங்கிய 2 வேன்கள் பறிமுதல்
- 2 டூரிஸ்ட் வேன்களில் ஒரே பதிவெண் இருந்ததை ஒருவர் சமூக வலைதளத்தில் பரப்பினார்.
- போலீசார் 2 வேன்களையும் பறிமுதல் செய்தனர்.
சூலூர்,
சூலூர் புதிய பஸ் நிலையம் முன்பு டூரிஸ்ட் வேன் வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்கள் நிறுத்தப்படுவது வழக்கம்.
அவ்வாறு நிறுத்தப்பட்டிருந்த 2 டூரிஸ்ட் வேன்களில் ஒரே பதிவெண் இருந்தது. இதனை அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பரப்பினார். இது சூலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்த சூலூர் போலீசார் புதிய பஸ்நிலையத்துக்கு சென்று சோதனை செய்தனர்.
பின்னர் ஒரே பதிவெண்ணில் இயங்கிய 2 வேன்களையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த 2 வேன்களும் ஒரே நபருக்கு சொந்தமானது என தெரியவந்தது. டூரிஸ்ட் வாகனங்களை வைத்துக் கொண்டு தொழிற்சாலைகளுக்கு கான்டிராக்ட் முறையில் இயக்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர் விசாரணையில் அவரிடம் உள்ள வாகனங்களுக்கு ஆர்.சி.புத்தகம் மட்டுமே இருப்பதாகவும், குறிப்பிட்ட வாகனங்களுக்கு இன்சூரன்ஸ், பெர்மிட் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. தொடர்ந்து சூலூர் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் பரிந்துரை செய்த சூலூர் போலீசார் மேல்நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் வேறு யாராவது ஒரே பதிவெண்ணில் பல வாகனங்களை இயக்குகிறார்களா என போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.