செய்திகள் (Tamil News)

கர்ப்பமாக்கிய பின்னர் காதலியை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது

Published On 2016-06-15 12:37 GMT   |   Update On 2016-06-15 12:37 GMT
நிலக்கோட்டை அருகே காதலியை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகில் உள்ள கண்ணாபட்டி காலனியை சேர்ந்தவர் வீரபத்திரன் மகன் கார்த்தி (வயது24). இவர் அதே பகுதியை சேர்ந்த கருப்பையா மகள் லிங்கமாளை (19) கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக காதலித்து வந்தார்.

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி லிங்கமாளுடன் பல முறை உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் லிங்கமா கர்ப்பம் அடைந்தார்.

இந்த விஷயம் தெரிய வரவே லிங்கமாளின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இருவருக்கும் திருமணம் செய்து வைக்க எண்ணினர் இது குறித்து லிங்கமாள் காதலன் கார்த்திக்கிடம் தெரிவித்தார். பெற்றோரிடம் கேட்டு தகவல் தெரிவிப்பதாக கார்த்திக் கூறினார்.

சில தினங்கள் கழித்து கார்த்திக் தனது தந்தை வீரபத்திரன், தாய் ஈஸ்வரி ஆகியோருடன் லிங்கமாவை சந்தித்து கர்ப்பத்தை கலைத்தால்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினார்.

இதனை நம்பிய லிங்கம்மாள் கர்ப்பத்தை கலைத்தார். அதன்பின்னரும் திருமணம் செய்யாமல் கார்த்திக் நாட்களை கடத்தி வந்தார்.

இதுபற்றி லிங்கம்மாள் கேட்டதற்கு திருமணம் செய்ய முடியாது என்று கார்த்திக் மறுத்து விட்டார். இதனால் பாதிக்கப்பட்ட லிங்கம்மாள் நிலக்கோட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி விசாரணை நடத்தி கார்த்திக்கை கைது செய்தார். தலைமறைவாகி விட்ட அவரது பெற்றோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News