செய்திகள் (Tamil News)

வேப்பூர் லாரி டிரைவர் கொலை வழக்கு: குற்றவாளி ஆந்திராவில் கைது

Published On 2016-06-29 12:24 GMT   |   Update On 2016-06-29 16:24 GMT
வேப்பூர் லாரி டிரைவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஆந்திராவில் கைது செய்யப்பட்டான்.
வேப்பூர்:

விழுப்புரம் அருகே உள்ள திருக்காவூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், லாரி டிரைவர். இவர் கடந்த மாதம் 30-ந் தேதி திருச்சியில் இருந்து விழுப்புரத்திற்கு லாரியை ஓட்டி வந்தார். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே வந்தபோது சிலர் அவரை வழிமறித்து அடித்து கொன்று பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அப்போது சேலம் பகுதியை சேர்ந்த கும்பல் பெண் ஆசை காட்டி லாரி டிரைவர் ராஜேந்திரனை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பணத்தை பறித்தபோது ஏற்பட்ட தகராறில் அவரை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.

இதையொட்டி சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த ராஜா, சுரேஷ் கந்தன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தார்கள். அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இதேபோல் லாரி டிரைவர்களை வழிமறித்து பணம் கொள்ளையடித்ததும், அவர்களுக்கு தலைவனாக நாமக்கல் மாவட்டம் போடி நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த பாபு (வயது 30) என்பதும் தெரிய வந்தது. போலீசார் அவனை தேடிவந்தனர். அவன் தலைமறைவாகவே இருந்து வந்தான்.

இதையொட்டி வேப்பூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு பகுதிகளில் தேடிவந்தனர். ஆந்திராவில் பாபு பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த பாபுவை மடக்கி பிடித்தனர்.

வேப்பூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து அவனிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News