செய்திகள் (Tamil News)

முட்டை உற்பத்தியை தக்கவைக்க தீவன மூலப்பொருட்களின் தரத்தை கண்காணிக்க வேண்டும்: ஆராய்ச்சி நிலையம் தகவல்

Published On 2016-06-29 17:10 GMT   |   Update On 2016-06-29 17:10 GMT
கோழிகளில் முட்டை உற்பத்தியை தக்க வைக்க தீவன மூலப்பொருட்களின் தரத்தை கண்காணிக்க வேண்டும் என ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

அடுத்த 3 நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இன்றும், நாளையும் ஒரு மில்லிமீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்று மணிக்கு 11 கி.மீ.வேகத்தில் மேற்கு திசையில் இருந்து வீசும். வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 95 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 78 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 42 சதவீதமாகவும் இருக்கும்.

வானிலையை பொறுத்த வரையில் தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால் மேகமூட்டத்துடன் சாரல்மழை இருக்கும். காற்றின் வேகம் உயர்ந்து நிலவும். பகல் மற்றும் இரவு வெப்ப அளவுகள் கோழிகளுக்கு சாதகமான வானிலையை தொடர்ந்து உருவாக்கும்.

முட்டை உற்பத்தியை தக்க வைக்க கோழித்தீவனத்திற்கான மூலப் பொருட்களின் கொள்முதல் மற்றும் தரத்தை கவனமாக கண்காணிக்க வேண்டும். மேலும் தீவனம் காற்றில் விரயமாகாமல் தடுக்கும் முறைகளை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Similar News