ஆற்காடு:
ஆற்காடு மாசாபேட்டை அண்ணாநகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. ஆட்டோ டிரைவர். இவரது மகள் இந்துமதி (வயது 16). ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு இந்துமதிக்கும், அவருடைய பெற்றோருக்கும் தகராறு ஏற்பட்டது.
அப்போது, இந்துமதியை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட இந்துமதி, சாப்பிடாமல் வீட்டு மாடியில் உள்ள அறைக்கு தூங்குவதாக கூறிவிட்டு சென்றார். மகள் கோபமாக இருந்ததால், பின்னர் சமாதானம் செய்து கொள்ளலாம் என விட்டுவிட்டனர்.
அறைக்கு சென்ற இந்துமதி துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நள்ளிரவில், மகளை திட்டிவிட்டோம் என நினைத்து வறுந்திய பெற்றோர் சாப்பாடு எடுத்துக் கொண்டு மாடியில் உள்ள அறைக்கு சென்றனர். அப்போது, இந்துமதி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்த ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இந்துமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.