செய்திகள் (Tamil News)

ஆரணி அருகே லாரி மோதி வாலிபர் பலி

Published On 2017-01-25 05:43 GMT   |   Update On 2017-01-25 05:43 GMT
ஆரணி அருகே லாரி மோதி வாலிபர் பலியானார். அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே களம்பூர் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் பச்சியப்பன். கூலித் தொழிலாளி. இவரது மகன் ராஜேஸ் (வயது 28). இவர் விமான நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.

சம்பவத்தன்று ராஜேஸ் வீட்டிலிருந்து களம்பூர் பஜாருக்கு பைக்கில் சென்றார். ஆரணி-போளூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது ஆரணியிலிருந்து போளூர் நோக்கி சென்ற லாரி, ராஜேஸ் வந்த பைக் மீது மோதியது.

ராஜேஸ் மீது லாரி ஏறியதால் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்து அவரது உறவினர்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர்.

ஆத்திரமடைந்த அவர்கள் திடீரென ஆரணி-போளூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களது கோபம் லாரி மீது பாய்ந்தது.

இதனால் அவர்கள் லாரி மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். சிலர் லாரிக்கு தீ வைத்தனர். ஒரு பிரிவினர் ஓடிவந்து தீயை அனைத்தனர். இதனால் லாரி முற்றிலும் எரியாமல் தப்பியது. இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது.

தகவல் கிடைத்ததும் ஆரணி டி.எஸ்.பி. ராஜன் தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடந்த 8 நாட்களுக்கு முன்பு களம்பூரில் லாரி மோதி சிறுவன் பலியானான். தற்போது விமான நிலைய ஊழியர் ராஜேஸ் பலியாகியுள்ளார். இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடைபெறுவதை தடுக்க வேண்டும் என்று அவர்கள் போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர்.

போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. ராஜேஸின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News