செய்திகள் (Tamil News)

சேலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 1-ம் வகுப்பு மாணவன் பலி

Published On 2017-01-25 09:49 GMT   |   Update On 2017-01-25 09:49 GMT
சேலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 1-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
கொண்டலாம்பட்டி:

சேலம், கொண்டலாம்பட்டி பி.நாட்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பசுபதி என்கிற அமல்ராஜ் (வயது 36). இவரது மகன் பிரதீபன் (6). இவன் அந்த பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி அன்று காலையில் வழக்கம் போல் பிரதீபன் பள்ளிக்கு புறப்பட்டு சென்றான். அதன் பிறகு பள்ளியில் இருந்து வெளியே உள்ள சாலைக்கு வந்தான். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சிறுவன் பிரதீபன் மீது திடீரென மோதியது.

இதில் படுகாயம் அடைந்த சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். சேலம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பிரதீபன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான்.

இந்த சம்பவம் குறித்து சேலம் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முதற்கட்ட விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்தது தம்மநாயக்கன்பட்டி மொரம்புகாடு பகுதியை சேர்ந்த துரைமுருகன் (வயது 37) என்பது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து இருக்கிறார்கள்.

Similar News