பெருந்துறை அருகே சரக்கு ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள வெள்ளாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 37). இவர் தற்போது துடுப்பதி பள்ளபாளையம் பகுதியில் குடியிருந்து வருகிறார்.
அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சரக்கு ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வரும் இவர் நேற்று காலை தனது வீட்டில் மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார்.
வாந்தி எடுத்த நிலையில் மயக்கமடைந்த இவரை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு பெருந்துறை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்து வமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இவர் மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இது தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.