செய்திகள் (Tamil News)

சங்கரன்கோவில் அருகே இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு

Published On 2017-01-25 10:31 GMT   |   Update On 2017-01-25 10:31 GMT
சங்கரன்கோவில் அருகே இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக வாலிபரின் உறவினர்கள் 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள மேல அழகுநாச்சியா புரத்தை சேர்ந்தவர் சுப்பையா மகள் மகேஸ்வரி (வயது 25). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த கருப்பசாமி மகன் ரஞ்சித்குமார் என்பவருக்கும் கடந்த 7 வருடங்களாக காதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 7.2.2016 அன்று ஊரில் வைத்து உறவினர்கள் முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாம்.

அதன் பின் இருவருக்கும் இடையே நெருக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில் கடந்த 16.6.2016 அன்று ரஞ்சித்குமாருக்கும் திருக்குறுங்குடியை சேர்ந்த சமயமுத்துமாரி என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் குறித்து அறிந்த மகேஸ்வரி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது பற்றி அவர் ரஞ்சித்குமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவரும் மற்ற அவரின் உறவினர்களும் சேர்ந்து மகேஸ்வரியை மிரட்டினார்களாம். இது குறித்து மகேஸ்வரி அளித்த புகாரை போலீசார் விசாரிக்கவில்லை என கூறப்படுகிறது.

அதனால் தனக்கு நியாயம் வேண்டும் என மகேஸ்வரி சங்கரன்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி சங்கரன்கோவில் மகளிர் காவல்நிலைய போலீசார், ரஞ்சித்குமார், கருப்பாயி, பேராசிரியர் ராஜ், தங்கராஜ், ரஞ்சித்குமாரின் மனைவி சமயமுத்துமாரி, சிவசங்கர், ஸ்டான்லி பிரகாஷ், ராஜேந்திரன் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Similar News