காதல் திருமணம் செய்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
ஈரோடு:
ஈரோடு கோட்டை முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி கனகவள்ளி (வயது20).
சக்திவேலும், கனகவள்ளியும் இரண்டு வருடத்திற்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.
கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் சக்திவேல்- கனகவள்ளிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கனகவள்ளி தற்கொலை செய்ய முடிவெடுத்து வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கினார்.
அருகில் இருந்தவர்கள் கனகவள்ளியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கனகவள்ளியை சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி கனகவள்ளி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஈரோடு மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.