செய்திகள் (Tamil News)

பஸ்சில் இருந்து மாணவன் கீழே விழுந்து படுகாயம்

Published On 2017-03-17 10:21 GMT   |   Update On 2017-03-17 10:21 GMT
பஸ்சில் இருந்து மாணவன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தான். இந்த தகவல் அறிந்ததும் அந்த பகுதி மக்கள் தாமரைபாக்கம் கூட்டு சாலையில் திடீர் சாலை மறியல் செய்தனர்.

பெரியபாளையம்:

வெங்கல் தாமரைப் பாக்கம் கூட்டு சாலையை சேர்ந்தவர் ஈஸ்வரன். அவரது மகன் நிதிஷ் (13). இவர் திருநின்றவூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இன்று காலை பள்ளிக்கு செல்ல தாமரைப்பாக்கம் கூட்டுசாலை பஸ் நிறுத்தத்திற்கு வந்தார். அப்போது பஸ்கள் நிற்காமல் சென்றது. இதனால் நிதிஷ் வேக தடை அருகே மெதுவாக சென்ற அரசு பஸ்சில் ஏறினார். அப்போது நிதிஷ் தவறி விழுந்தான்.

இதில் பஸ்சின் பின் சக்கரம் அவன் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்தான். உடனே அவனை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தகவல் அறிந்ததும் அந்த பகுதி மக்கள் தாமரைபாக்கம் கூட்டு சாலையில் திடீர் சாலை மறியல் செய்தனர். இதனால் செங்குன்றம், திருவள்ளூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயக மூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News