கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்திய 5 லாரிகள் பறிமுதல்
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றில் மர்ம நபர்கள் லாரிகளில் மணல் கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லிக்கு தகவல் கிடைத்தது.
கலெக்டரின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் கொசஸ்தலை ஆற்று பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
திருக்கண்டலம் ஆற்றில் சோதனை நடத்திய போது மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் அதிகாரிகளை பார்த்ததும் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து லாரியை கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ பறிமுதல் செய்து பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதேபோல் பூச்சிஅத்திப்பேடு, குருவாயல், கோடு வெளி ஆகிய பகுதிகளில் நடத்திய சோதனையில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 4 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து வெங்கல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இங்கும் மணல் கடத்தல்காரர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து பெரியபாளையம் வெங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.