செய்திகள் (Tamil News)

வேலூரில் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி 3 பேரிடம் ரூ.3 லட்சம் நூதன திருட்டு - எஸ்.பி.யிடம் புகார்

Published On 2017-07-26 10:56 GMT   |   Update On 2017-07-26 10:56 GMT
வேலூரில் அரசு போக்குவரத்து கழக ஊழியர் உள்ளிட்ட 3 பேரிடம் ஏ.டி.எம். கார்டு நம்பரை பயன்படுத்தி, 3 லட்சம் ரூபாயை நூதன முறையில் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர்:

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் சந்திரரூபன்(வயது 61). ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழயர். இவர் எஸ்.பி. அலுவலகத்தில் இன்று கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உள்ள எனது கணக்கில், 2 லட்சத்து 77 ஆயிரத்து 689 ரூபாய் இருப்பு இருந்தது. கடந்த மாதம் வேலூரில் உள்ள ஒரு நகை கடையில் ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கினேன். அதன் பின் எனது ஏ.டி.எம்.கார்டை எங்கும் பயன்படுத்தவில்லை.

சமீபத்தில் எனது வங்கி கணக்கை சரிபார்த்த போது, அதில், 25 முறை 98 ஆயிரத்து, 200 ரூபாய் வரை பணமாக எடுக்கப்பட்டு இருந்தது. மேலும், 63 இடங்களில் ஒரு லட்சத்து, 79 ஆயிரத்து 300 ரூபாய் வரை பொருட்கள் வாங்கியது தெரிய வந்துள்ளது. நான் எந்த பரிவர்தனையும் செய்யாத நிலையில் எனது கணக்கில் உள்ள பணம் மட்டும் மாயமாகி உள்ளது.

வேலூர் நகை கடையில் ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் போது எனது ரகசிய குறீட்டு எண்ணை தெரிந்துக்கொண்டு மர்ம நபர்கள் தான் எனது கார்டை பயன்படுத்தி நூதன முறையில் 2 லட்சத்து 77 ஆயிரத்து 689 ரூபாயை திருடி உள்ளனர். அவர்களை கண்டுபிடித்து எனது பணத்தை மீட்டு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

அதேபால், ராணிப்பேட்டை, சிப்காட் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் எஸ்.பி. அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

எனது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் வங்கி மேலாளர் என்று அறிமுகப்படுத்தி கொண்டார். பின்னர், ’உங்கள் ஏ.டி.எம்.வங்கி அட்டை எண்னை மாற்றி புதிய எண் வழங்க உள்ளோம். அதனால், உங்களது வங்கி எண், ஏ.டி.எம்.எண்ணை உடனடியாக தெரிவிக்க’ கூறினார். நான் அதை உண்மை என்று நம்பி எனது மற்றும் மனைவியின் எண்ணையும் சேர்த்து தந்தேன்.

அதன் பின் எனது கணக்கில் இருந்து 8 ஆயிரம் ரூபாயும், எனது மனைவி கணக்கில் இருந்து 11 ஆயிரம் ரூபாய் எடுத்ததாக குறுந்தகவல் வந்தது. எங்கள் வங்கி கணக்கில் இருந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை கண்டுபிடித்து எங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து வேலூர் மாவட்ட குற்ற பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் உள்பட 3 பேரிடம் ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி ரூ. 3 லட்சம் வரை கொள்ளையடித்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News