செய்திகள் (Tamil News)

அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும்: மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

Published On 2017-09-15 05:46 GMT   |   Update On 2017-09-15 05:46 GMT
பொதுநலன் கருதி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.
மதுரை:

மதுரையைச் சேர்ந்த வக்கீல் சேகரன் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில் தமிழ்நாடு ஆசிரியர்கள்-அரசு ஊழியர் சங்கங்கள் (ஜாக்டோ -ஜியோ) தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மாணவர்களும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தனர்.

இருப்பினும் கோர்ட்டு தடையை மீறி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோர்ட்டு உத்தரவை மதிக்காத அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று மீண்டும் வக்கீல் சேகரன் மனுத்தாக்கல் செய்தார்.


மனுவை பரிசீலித்த நீதிபதிகள் ஐகோர்ட்டின் தடை உத்தரவு நோட்டீசை சம்பந்தப்பட்ட சங்க நிர்வாகிகளுக்கு சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் வழங்க உத்தரவிட்டார்.

மேலும் தமிழ்நாடு ஆசிரியர்-அரசு ஊழியர் சங்கங்களின் நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தலைவர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், சங்கத்தலைவர், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தலைவர் ஆகியோர் 15-ந் தேதி (இன்று) ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

அதன்படி சங்க நிர்வாகிகள் இன்று மதுரை ஐகோர்ட்டில் ஆஜரானார்கள். வழக்கு 11 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள் பொதுநலன் கருதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும். எந்தவித நிபந்தனையும் வைக்காமல் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றால் தலைமை செயலாளர் முன்னிலையில் வருகிற திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று அறிவுறுத்தினர்.

Similar News