திண்டுக்கல்லில் மழை: விவசாய பணிகள் மும்முரம்
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே வி.எஸ்.கோட்டை, கோபால்பட்டி, சிலுவத்தூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மானாவாரி பயிர்களை அதிக அளவு பயிரிட்டு வருகின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவியதால் பயிர்கள் அனைத்தும் கருகியது. இதனால் விவசாயிகள் பலர் நஷ்டம் அடைந்தனர். மேலும் வேறு தொழில் தேடி பல்வேறு ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கினர்.
கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெகு நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனால் வறண்டு கிடந்த போர்வெல்லில் தண்ணீர் வரத் தொடங்கியது. நிலத்தடி நீர்மட்டமும் ஓரளவு உயர்ந்துள்ளது. இப்பகுதியில் உள்ள குளம், குட்டை உள்பட அனைத்து நீர்நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
எனவே விவசாயிகள் மும்முரமாக மானாவாரி பயிர்களான சோளம், கம்பு மற்றும் கால்நடை தீவணமான புல்லுகுச்சி ஆகியவற்றை நடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மழை தொடர்ந்து பெய்தால் விவசாயம் செய்ய ஏதுவாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.