செய்திகள் (Tamil News)

காஞ்சீபுரத்தில் ஸ்ரீதர் கார் டிரைவர் மீது வெடிகுண்டு வீசிய ரவுடி கைது

Published On 2017-11-29 06:37 GMT   |   Update On 2017-11-29 06:37 GMT
காஞ்சீபுரத்தில் ஸ்ரீதர் கார் டிரைவர் மீது வெடிகுண்டு வீசிய ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் இறந்து போன பிரபல ரவுடி ஸ்ரீதரின் கார் டிரைவர். ஸ்ரீதரின் தற்கொலைக்கு பிறகு அவருடன் தொடர் பில் இருந்தவர்கள் தனித் தனி குழுக்களாக செயல்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 25-ந் தேதி மாலை காஞ்சீபுரம் பழைய ரெயில் நிலையம் அருகே தினேஷ் காரை நிறுத்தினார்.

அப்போது மற்றொரு காரில் பின்தொடர்ந்து வந்த ரவுடி தணிகா என்ற தணிகைவேல் மற்றும் அவரது கூட்டாளிகள் தினேஷ் வந்த கார் மீது வெடிகுண்டுகள் வீசி தப்பி சென்றுவிட்டனர்.

இதில் உயிர் தப்பிய தினேஷ் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ரவுடி தணிகாவை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின்பேரில், டிஎஸ்பி முகிலன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில் ரவுடி தணிகை காஞ்சீபுரம் வெள்ளகுளம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் விரைந்து சென்று தணிகாவை கைது செய்தனர்.

அவர் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News