செய்திகள் (Tamil News)

செங்கல்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆந்திர வாலிபர் மர்ம மரணம்

Published On 2018-01-15 08:43 GMT   |   Update On 2018-01-15 08:43 GMT
செங்கல்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆந்திர வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு:

ஆந்திர மாநிலத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு காச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணிகள் அனைவரும் இறங்கிய போது வாலிபர் ஒருவர் மட்டும் மர்மமாக இறந்து கிடந்தார்.

அவரது வாயில் ரத்தம் வழிந்து இருந்தது. தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பது தெரிந்தது. அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது.

ரெயில் பயணத்தின் போது மர்ம நபர்கள் யாரேனும் அவரை அடித்து கொலை செய்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மற்றொரு சம்பவம்...

காஞ்சீபுரத்தை அடுத்த கணபதிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (21). தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர் பன்னீர் செல்வத்துடன் மோட்டார் சைக்கிளில் வரதபுரம் பகுதியில் இருந்து சிறுவாக் கம் நோக்கி வந்தார்.

சிறுவாக்கம் பகுதியை கடக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர சிறிய பாலத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பிரகாஷ் பரிதாபமாக பலியானார். படுகாயம் அடைந்த பன்னீர்செல்வம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிங்கபெருமாள் கோவிலை அடுத்த அஞ்சூர் புதிய கிராமத்தை சேர்ந்தவர் சந்தியப்பன். இவரது மனைவி ஷியாமி (53). மறைமலைநகரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அவர் சாலையை கடந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிற்காமல் சென்றுவிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே ‌ஷியாமி பலியானார்.

Similar News