செய்திகள் (Tamil News)

நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பலி

Published On 2018-01-15 11:56 GMT   |   Update On 2018-01-15 11:56 GMT
மோட்டார் சைக்கிள் விபத்தில் காயம் அடைந்த என்ஜினீயரிங் மாணவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் அருகே மேலபெருவிளை மேரிஸ் தெருவைச் சேர்ந்தவர் துரை. இவரது மகன் சகாயசுரேஷ் (வயது 19). இவர் அம்மாண்டிவிளை பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.

சகாயசுரேஷ் தனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் கோணம் பகுதியில் வந்துகொண்டிருந்தார். அப்போது எதிர் பாராத விதமாக அவர் தவறி கீழே விழுந்தார். அந்த வேகத்தில் மோட்டார் சைக்கிள் ரோட்டோரமாக நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது மோதியது.

தவறி விழுந்த சகாய சுரேசுக்கு தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டனர். நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் சசீதரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சகாயசுரேசை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சகாயசுரேஷ் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Similar News