செய்திகள்

அன்னமங்கலம்-குளத்தூர் பகுதிகளில் ஜல்லிக்கட்டு: பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம்

Published On 2018-05-12 16:47 GMT   |   Update On 2018-05-12 16:47 GMT
அன்னமங்கலம்-குளத்தூர் பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் அளிக்கப்படும் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலத்தில் வருகிற 20-ந்தேதியும், குளத்தூர் கிராமத்தில் வருகிற 31-ந்தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டை பாதுகாப்பாகவும், அரசு விதிகளுக்கு உட்பட்டு நடத்துவது குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் விழாக்குழுவினருடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது, ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வோர் தங்கள் பகுதியின் வருவாய்த்துறை வட்டாட்சியரிடம் தங்களது பெயரினை பதிவு செய்யவேண்டும். மேலும், தங்களது உடல்தகுதி குறித்து உரிய மருத்துவரிடம் சான்று பெற்ற பின்னரே ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். காளைகள் உடல் தகுதி பெற்றுள்ளதா என்பதனை பரிசோதித்து கால்நடை மருத்துவர் சான்று அளித்தால் மட்டுமே காளைகள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படும்.

ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் முக்கிய இடங்களில் கண் காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, நிகழ்வுகள் பதிவு செய்யப்படவேண்டும். பார்வையாளர்களும், சுற்றுப்புறத்தாரும் பாதிக்கப்படாத வகையில், உறுதியான இரும்பு சட்டங்கள் மற்றும் மரக்கட்டைகள் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். பார்வையாளர்கள் உட்கார்ந்து பார்ப்பதற்கு வசதியாக காலரி வசதி ஏற்படுத்தப்படவேண்டும். மாடுபிடி வீரர்களுக்கு சீருடை வழங்கப்படவேண்டும். எனவே, ஜல்லிக்கட்டு நடத்தும் விழாக் குழுவினர் அரசு வகுத்துள்ள விதிகளை முறையாக பின்பற்றி ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமன், கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) செல்வராஜ், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாரதிதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News