சீர்காழி அருகே விடுதலை சிறுத்தை கட்சி கொடிகம்பம் வெட்டி சாய்ப்பு: நிர்வாகிகள் அதிர்ச்சி
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே சட்ட நாதபுரம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் உள்ளது. இந்த கொடி கம்பத்தில் கடந்த ஏப்ரல் மாதம் திருமாவளவன் கொடியேற்றி வைத்தார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மர்ம கும்பல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தை வெட்டி சாய்த்து சேதப்படுத்தினர்.
கொடி கம்பம் சேதப்படுத்திய தகவல் கிடைத்ததும் கட்சி நிர்வாகிகள் திரண்டனர். தொகுதி பொறுப்பாளர் தாமு இனியவன், செய்தி தொடர்பாளர் தேவா, மாவட்ட துணை செயலாளர் காமராஜ் மற்றும் நிர்வாகிகள் வந்திருந்து பார்வையிட்டனர்.
பின்னர் இந்த சம்பவம் பற்றி சீர்காழி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தை சேதப்படுத்திய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.