செய்திகள்

காஞ்சீபுரம் அருகே டாஸ்மாக் குடோனுக்கு தீவைப்பு

Published On 2018-05-28 07:07 GMT   |   Update On 2018-05-28 07:07 GMT
காஞ்சீபுரம் அருகே டாஸ்மாக் குடோனுக்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tasmac #Tasmacgodownfire

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் அரசு டாஸ்மாக் குடோன் உள்ளது. மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து எடுத்து வரப்படும் மதுபான பாட்டில்கள் இங்கிருந்து வாகனங்கள் மூலம் அரசு மதுபானக் கடைகளுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.

நேற்று படப்பை, வாலாஜா பாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லாரிகளில் மதுபான வகைகள் கொண்டு வரப்பட்டது. மதுபாட்டில்களுடன் லாரிகள் குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் நள்ளிரவில் டாஸ்மாக் குடோனுக்கு மர்ம நபர்கள் வந்தனர். திடீரென அவர்கள் அங்கு மதுபாட்டில்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லாரிகளுக்கு தீ வைத்து தப்பி ஓடினர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

எனினும் 3 லாரிகளும் அதில் இருந்த ரூ. 80 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் அங்கிருந்த மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இந்த தீ வைப்பு சம்பவம் நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

அரசு டாஸ்மாக் குடோனில் மதுபான லாரிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்கு பதிவு செய்து தீ வைத்து மர்ம நபர்களை தேடி வருகிறார். #Tasmac #Tasmacgodownfire

Tags:    

Similar News