செய்திகள்

மதுரையில் நாளை மாநாடு: இந்து முன்னணி கொடிகள்- பதாகைகள் எரிப்பு

Published On 2018-06-09 16:13 GMT   |   Update On 2018-06-09 16:13 GMT
மதுரையில் நாளை இந்து முன்னணி மாநாடு நடக்க உள்ள நிலையில் அண்ணாநகர், மேலமடை பகுதியில் விளம்பர பலகை- கொடிகள் எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை:

மதுரை கோட்ட இந்து முன்னணி மாநாடு மதுரை அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் அருகில் நாளை (10-ந் தேதி) மாலை நடக்கிறது.

இதில் நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன், மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்து முன்னணி மாநாடையொட்டி மதுரையில் பல்வேறு இடங்களில் விளம்பர பதாகைகள் மற்றும் கட்சி கொடிகள் கட்டப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் மேலமடை, அண்ணா நகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள், கட்சி கொடிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு தப்பியோடி விட்டனர்.

இதையடுத்து அங்கு இந்து முன்னணி நிர்வாகிகள் குவிந்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்து முன்னணி விளம்பர பதாகை- கொடிகளை எரித்து விட்டு தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மாவட்ட பொது செயலாளர் அழகர்சாமி கூறும் போது இந்து முன்னணி மாநாட்டை சீர்குலைக்கும் நோக்கில் பயங்கரவாதிகள் இத்தகைய சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News