ஆண்டிப்பட்டி அருகே முந்திரி திருடிய வாலிபர் கைது
தேனி:
ஆண்டிப்பட்டி தாலுகா வருஷநாடு சிங்கராஜ புரத்தைச் சேர்ந்தவர் லோகன்துரை. (வயது 44). இவர் சம்பவத்தன்று தனது தோட்டத்தில் பறித்த கொட்டை முந்திரியை வீட்டில் வைத்து விட்டு வெளியூர் சென்று விட்டார்.
திரும்பி வந்து பார்த்த போது 60 கிலோ எடையுள்ள கொட்டை முந்திரி மூட்டை காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கம் விசாரித்து பார்த்தும் தகவல் தெரியவில்லை.
வீட்டில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தியிருந்ததால் அதை சோதித்து பார்த்ததில் மர்ம நபர் ஒருவர் முந்திரி மூடையை திருடிச் சென்றிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து வருஷநாடு போலீசில் லோகன்துரை புகார் செய்தார். போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியதில் முந்திரியை திருடியது அதே பகுதியைச் சேர்ந்த கோட்டைச்சாமி (37) என தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் கோட்டைச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.