செய்திகள்

கொடைக்கானல் அருகே சிறுத்தை, கரடி நடமாட்டத்தால் விவசாயிகள் பீதி

Published On 2018-07-02 12:16 GMT   |   Update On 2018-07-02 12:16 GMT
கொடைக்கானல் கீழ் மலை பகுதிகளில் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டத்தால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

பெரும்பாறை:

கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை, தாண்டிக்குடி மற்றும் பல்வேறு மலைகிராமங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்திருப்பதால் அடிக்கடி வன விலங்குகள் இடம் பெயர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகின்றன.

மேலும் விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் வனத்துறையினர் அடிக்கடி பார்வையிட்டு வன விலங்குகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாண்டிக்குடி அருகே உள்ள பட்டலாங்காடு என்ற பகுதியில் அதிகாலையில் தோட்ட வேலைக்கு சென்றவர்கள் கரடி நடமாட்டத்தை கண்டு அச்சமடைந்தனர். அதிகாலையில் வனப்பகுதியை கடந்து கரடி சென்றதால் இரவு நேரத்தில் பசிக்காக தோட்டத்தில் புகுந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.

இதே போல நேற்று பெருங்கானல் பகுதியில் சிறுத்தைப்புலி நடமாடியதைப்பார்த்து அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் வனத்துறையினர் அங்கு முகாமிட்டு வன விலங்குகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து வன விலங்குகள் இடம் பெயர்ந்து தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் நடமாடி வருவது விவசாயிகளை பீதியடைய வைத்துள்ளது. #Tamilnews

Tags:    

Similar News