செய்திகள் (Tamil News)

அரசை எதிர்த்து போராடுபவர்களை கைது செய்வதா? - திருநாவுக்கரசர் கண்டனம்

Published On 2018-07-04 09:34 GMT   |   Update On 2018-07-04 09:34 GMT
அரசுக்கு எதிராக போராடும் பொதுமக்களை ஜனநாயகத்திற்கு விரோதமாக கைது செய்வதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

8 வழி சாலையாக என்றாலும் சரி, மக்களுக்கு எதிரான அரசு நடவடிக்கைகள் கண்டித்து அரசியல் கட்சிகளோ பொது மக்களோ போராடுகிறபோது பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் முயற்சி செய்ய வேண்டுமே தவிர பிரச்சினையை மக்களுக்காக எழுப்புபவர்களை அடக்குகிறவிதமாக வழக்கு போடுவது, கைது செய்வது ஜனநாயக விரோதமான ஃபாஸிச போக்கு. அதை காங்கிரஸ் கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராடுகிறார்கள். சிறு குறு விவசாயிகள் தங்கள் நிலங்களை கட்டாயப்படுத்தி எடுக்கப்படுவதால் போராடுகிறார்கள். அவர்களுடைய பிரச்சினையை கையில் எடுப்பது அரசியல் கட்சியின் கடமையாகும். அதற்காக கைது செய்வது தவறானது. இதுவரை நடைமுறையில் இல்லாத போராட்டங்களை நசுக்குகிற செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவரப்படுவது காலதாமதமாக இருந்தாலும் நான் வரவேற்கிறேன். இதில் முதலமைச்சர் உள்பட அனைவரையும் விசாரிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் எய்மஸ் மருத்துவமணை வருகிறதை வரவேற்கிறேன். இதற்கு மத்திய அரசு நிதியை உடனடியாக அளிக்க வேண்டும். மாநில அரசு நிதி பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை ஏன் அரசு நிறுத்தி உள்ளது என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் தவறா? அல்லது தற்போது அரசு செய்துள்ளது தவறா? என்பதை அமைச்சர் தங்கமணி தெரிவிக்க வேண்டும்.

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரித்து காலதாமதமின்றி விரைவாக தீர்ப்பு வர வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முடிவில் அனைத்து கட்சிகளையும் அழைத்து ஆலோசனை செய்து முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News