செய்திகள்

ரசாயன மீன்கள் விற்பனை எதிரொலி: அதிகாரிகளை கண்டித்து மீன் வியாபாரிகள் கடையடைப்பு

Published On 2018-07-12 10:54 GMT   |   Update On 2018-07-12 10:54 GMT
ரசாயன மீன்கள் விற்பனை செய்வதாக தவறான தகவல் தெரிவித்து எங்களுடைய வியாபாரத்தை பாதிக்கப்பட செய்த மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பெரியார் மீன் அங்காடியில் கடந்த 9-ந் தேதி மீன்வளத்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது பார்மலின் என்கிற ரசாயன் கலக்கப்பட்டுள்ள மீன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கும்பகோணம் பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து மீன்கள் வாங்க செல்லாததால் கடந்த 2 நாட்களாக மீன் மார்க்கெட் வெறிச் சோடியது. இதையடுத்து அதிகாரிகளின் தவறான தகவல் தெரிவித்ததால் வியாபாரம் பாதிக்கப்பட்டதையடுத்து மீன் வளத்துறை அதிகாரிகளை கண்டித்து மீன் அங்காடி வியாபாரிகள் இன்று காலை ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

இதில் பொருளாளர் நசீர், அவைத்தலைவர் ஜெயினுலாபுதீன், உறுப்பினர் ராஜா மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து கும்பகோணம் பெரியார் மீன் அங்காடி தலைவர் ராஜ் கூறியதாவது:-

கும்பகோணம் மீன் மார்க்கெட்டில் ரசாயனம் கலக்கப்பட்ட மீன்கள் விற்கப்படுவதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தவறான தகவல் தெரிவித்துள்ளனர். எங்களுடைய வியாபாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த 2 நாட்களாக வியாபாரம் பாதிக்கப்பட்டதால் ரூ. 1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.



எனவே இங்கு ஆய்வு செய்த அதிகாரிகள் கும்பகோணம் மீன் மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவதில்லை என தெரிவித்து பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும். பார்மலின் ரசாயனம் என்றால் என்ன என்று கூட எங்களுக்கு தெரியாது. அதை நாங்கள் விற்பனை செய்வதில்லை. எனவே தவறான தகவல் தெரிவித்து எங்களுடைய வியாபாரத்தை பாதிக்கப்பட செய்த மீன்வளத்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Tags:    

Similar News