செய்திகள்

எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 வாலிபர்கள் உயிருடன் மீட்பு

Published On 2018-08-03 18:22 GMT   |   Update On 2018-08-03 18:22 GMT
எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 வாலிபர்களை தீயணைப்பு நிலைய வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
எடப்பாடி:

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி அருகே உள்ள காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா இன்று கோலாகலமாக நடை பெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வந்து புனித நீராடினார்கள்.

இன்று பகல் 12 மணிக்கு எடப்பாடி அடுத்த ஆடையூர் அம்பேத்கார் காலனி பகுதியை சேர்ந்த குமார் (வயது 29) மற்றும் சுரேஷ் (39) ஆகிய இருவரும் நண்பர்களுடன் பூலாம்பட்டி அருகே உள்ள மோளப்பாறை காவிரி ஆற்றில் இறங்கி புனித நீராடினர்.

இருவரும் திடீரென ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். தண்ணீரின் ஓட்டம் அந்த பகுதியில் அதிகமாக இருந்ததால் இருவரும் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டனர். இதை பார்த்த கரையில் நின்ற நண்பர்கள் அவர்களை காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர்.

முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எடப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் முனியப்பன், கூச்சல் சத்தத்தை கேட்டு அங்கு ஓடி வந்தார். அவரது முன்னிலையில் வீரர்கள் சிவராஜ், மாணிக்கம், குமரவேல், முத்துக்குமார் ஆகிய 4 பேரும் பாதுகாப்பு கவசம் அணிந்து உடனடியாக ஆற்றில் குதித்து குமார், சுரேஷ் ஆகிய இருவரையும் பின் தொடர்ந்து நீந்திச் சென்றார்கள்.

சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் ஆணைபுலிக்காடு பகுதியில் 2 பேரையும் தடுத்து நிறுத்தி மீட்டு பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தனர். 2 பேரும் தண்ணீர் அதிகமாக குடித்து இருந்தனர். இதனால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. #tamilnews
Tags:    

Similar News