செய்திகள் (Tamil News)

ராஜாஜி அரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்

Published On 2018-08-09 15:49 GMT   |   Update On 2018-08-09 16:28 GMT
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் போது கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை சந்தித்து செயல்தலைவர் ஸ்டாலின் இன்று நலம் விசாரித்தார்.
சென்னை :

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நேற்று பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக லட்சக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் ராஜாஜி அரங்கில் திரண்டனர். 

கூட்டம் அதிகரித்த காரணத்தினால் விஐபிக்கள் செல்லும் வழியில் மக்கள் நுழைய முற்பட்டனர். இதனால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு சில இடங்களில் நெரிசலும் ஏற்பட்டது. 

மேலும், சிலர் படிக்கட்டு வழியாக ஏறி, கருணாநிதி உடலைப் பார்க்க முயன்றதால் ஒரு கட்டத்தில் போலீஸ் லேசான  தடியடியும் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமானது. 



இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ராஜாஜி அரங்கில் நெரிசலில் சிக்கி காயமடைந்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று உடல்நலம் விசாரித்தார். அவருடன் நடிகர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேஷ் பொய்யா மொழி, சேகர் பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 
Tags:    

Similar News