வடமதுரையை ஏமாற்றிய மழை தண்ணீரின்றி கருகும் பூ-காய்கறி செடிகள்
வடமதுரை:
திண்டுக்கல் அருகே வடமதுரை, அய்யலூரைச் சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் பெரும்பாலானோர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களே. இந்த பகுதியில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி, கத்தரிக்காய், முள்ளங்கி, பச்சை மிளகாய் ஆகிய காய்கறிகள் மற்றும் செண்டுமல்லி, கோழிக்கொண்டை, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களையும் பயிரிட்டு வருகின்றனர்.
தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் சில பகுதிகளில் மட்டுமே ஓரளவுக்கு மழை பெய்கிறது. வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதிகளை தொடர்ந்து மழை ஏமாற்றி வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரமணாக காய்கறி மற்றும் பூக்கள் செடிகளிலேயே கருகுகின்றன. இதனை கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். பல்வேறு இன்னல்களுக்கிடையே தொடர்ந்து விவசாயம் செய்து வரும்இவர்களுக்கு இது மேலும் ஒரு இடியாக உள்ளது.
இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் 600-ல் இருந்து 700 அடி வரை சென்று விட்டது. இதனால் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.