செய்திகள்

திருபுவனை அருகே 9-ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு

Published On 2018-08-24 09:37 GMT   |   Update On 2018-08-24 09:37 GMT
திருபுவனை அருகே பள்ளி மைதானத்தில் விளையாடிய போது 9-ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து இறந்து போனார்.
திருபுவனை:

திருபுவனை அருகே மதகடிப்பட்டு பாளையம் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்தவர் கலைச்செல்வன். விவசாயி. இவரது மகள் நிஷாந்தி (வயது 14).

இவர், அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை நிஷாந்தி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். மாலையில் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மற்ற மாணவிகளுடன் நிஷாந்தி விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென நிஷாந்தி மயங்கி விழுந்தார். உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியர் கணபதி அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் நிஷாந்தியை மீட்டு திருபுவனை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நிஷாந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேலு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே பள்ளியில் மாணவி மயங்கி விழுந்து இறந்தது குறித்து அறிந்ததும் பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் குப்புசாமி நேற்று மாலை பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினார். மாணவி நிஷாந்தி மயங்கி விழுந்து இறந்து போனதையடுத்து இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News