செய்திகள்

நாகல்நகர் பாலத்தில் அசுர வேகத்தில் செல்லும் ஆட்டோக்களால் தொடரும் விபத்து

Published On 2018-08-27 10:35 GMT   |   Update On 2018-08-27 10:35 GMT
திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் அசுர வேகத்தில் செல்லும் ஆட்டோக்களால் விபத்துகள் தொடர்கிறது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு தினசரி நூற்றுக்கணக்காக ஆட்டோக்கள் வந்து செல்கிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் இந்த ஆட்டோக்கள் பாலத்தின் மீதும் அதனை ஒட்டி ரெயில் நிலையம் செல்லும் போதும் மின்னல் வேகத்தில் செல்கின்றன.

குறிப்பாக கீழ் பாலத்தில் அதிக மக்கள் நடமாட்டமும், பல்வேறு குறுக்கு சந்துகளும் உள்ளன. இந்த சந்துகளில் இருந்து நடந்து வருபவர்களும், இரு சக்கர வாகனங்களில் வருபவர்களும் இந்த ஆட்டோக்கள் மீது மோதி விபத்தை சந்தித்து வருகின்றன.

ரெயில் செல்லும் முன்பாக பயணிகளை ரெயில் நிலையம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சாலையில் நடந்து செல்பவர்களை பற்றி கவலைப்படாமல் இது போன்ற வேகத்தில் செல்கின்றனர். இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையை கடக்கவே பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

திண்டுக்கல் வி.எஸ்.கோட்டையைச் சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 33). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கனரக ஓட்டுனர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார். இன்று காலை போக்குவரத்து பணிமனை முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த போது அசுர வேகத்தில் வந்த ஆட்டோ இவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டார். மேலும் ஆட்டோவும் தலைகுப்புற கவிழ்ந்தது.

படுகாயமடைந்த பத்மநாபன்அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இது போன்ற தொடர் விபத்துகளை தடுக்க இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். விதி மீறும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News