எந்த தேர்தலிலும் கமல்ஹாசன் போட்டியிடமாட்டார்- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தாக்கு
சிவகாசி:
சாத்தூரில் அரசின் சாதனைகளை விளக்கி சைக்கிள் பேரணி நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அம்மா வழியில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் அரசு மீது வீண் பழி சுமத்தி பொய் பிரசாரம் செய்கிறது. அதனை முறியடிக்கவே அ.தி.மு.க. சைக்கிள் பேரணி நடத்துகிறது. இதனால் மக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட வில்லை என்று தெரிவித்துள்ளார். அவர் இந்த தேர்தலில் மட்டுமல்ல, எந்த தேர்தல் நடந்தாலும் போட்டியிட மாட்டார். ஏனென்றால் தேர்தலில் போட்டியிட அவரது கட்சியில் ஆட்கள் இல்லை.
நடிகர்கள் ஆசைப்பட்டு அரசியலுக்கு வருகிறார்கள். எத்தனை நடிகர்கள் கட்சிகளை தொடங்கி னாலும் தமிழகத்தை திராவிட கட்சிகள்தான் ஆளும்.
எம்.ஜி.ஆர். - ஜெயலலிதாவுக்கு இருந்த மக்கள் செல்வாக்கு தற்போதுள்ள நடிகர்களுக்கு இல்லை.
அழகிரி திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் போட்டியிட்டால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏனென்றால் அது அம்மாவின் கோட்டை. அங்கு அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும். தமிழகத்தில் நீர்நிலைகளை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #kamal #ministerrajendrabalaji