கோவையில் பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு
கோவை:
சாய்பாபாகாலனியை அடுத்த கோவில்மேடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மனைவி மனோன்மணி(வயது 67).
இவர் விநாயகர் சிலைகள் வாங்குவதற்காக நேற்று இரவு தனது மகன் அருண்குமாருடன் (40) காரில் தடாகம் ரோட்டில் ஜி.சி.டி. கல்லூரி முதல் கேட் பகுதிக்கு வந்தார்.
அருண்குமார் சிலைகள் வாங்க சென்ற போது மனோன்மணி கார் அருகே நின்றதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேர் மனோன்மணி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். உடனே அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் நகைபறித்த வாலிபர்களை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.