செய்திகள் (Tamil News)

நெல்லை சந்திப்பு சாலைக்குமாரசாமி கோவிலில் ஒரே நாளில் 43 திருமணங்கள்- போக்குவரத்து ஸ்தம்பித்தது

Published On 2018-09-12 10:22 GMT   |   Update On 2018-09-12 10:22 GMT
நெல்லை சந்திப்பில் பிரசித்திபெற்ற சாலைக் குமாரசாமி கோவிலில் ஒரே நாளில் நடந்த 45 திருமணங்கல் நடைபெற்றது. இதற்கு வந்த உறவினர்கள் கூட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
நெல்லை:

நெல்லை சந்திப்பில் பிரசித்திபெற்ற சாலைக் குமாரசாமி கோவில் உள்ளது. குறுக்குத்துறையில் இருந்து திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலுக்கு சாமி சிலைகள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கோவில் வரலாறு கூறுகிறது. தினமும் இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருவது வழக்கம்.

முகூர்த்த நாட்களில் இந்த கோவிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்று வருகிறது. சில சமயங்களில் ஒரே நாளில் அதிக ஜோடிகளுக்கு திருமணம் நடை பெறும். இன்று முகூர்த்த நாள் என்பதால் சாலைக்குமார சுவாமி கோவிலில் ஒரே நாளில் 43 திருமணங்கள் நடைபெற்றது.

அதிகாலையில் இருந்தே புதுமண ஜோடிகள் கோவிலுக்கு வரத் தொடங்கினர். அவர்களது உறவினர்களும் கூட்டம் கூட்டமாக வந்தனர். காலையில் இருந்தே திருமணங்கள் நடைபெற தொடங்கியது. அடுத்தடுத்து ஒவ்வொரு ஜோடியாக திருமணம் முடிந்து சென்றனர். மணமக்களின் உறவினர்கள் கோவில் முன்பாக ஆங்காங்கே கூடி நின்றனர். கோவிலுக்குள்ளேயும் ஏராளமானோர் நின்றார்கள். இதனால் அந்த பகுதி முழுவதுமே பக்தர்கள் கூட்டமாக காட்சியளித்தது.

கோவில் முன்பு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரமாக வாகனங்கள் செல்ல முடியாமல் அப்பகுதி முழுவதும் ஸ்தம்பித்தது. இதனால் கோவிலுக்கு வந்த மணமக்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமல்லாமல் அந்த பகுதி வழியே சென்ற பொதுமக்களும் அவதிப்பட்டனர்.



வெகுநேரத்திற்கு பிறகே போக்குவரத்து சீரானது. இதுபோன்ற முகூர்த்த நாட்களில் போக்குவரத்தை சரி செய்யவும், திருமண ஜோடிகளை முறையாக கோவிலுக்குள் அனுமதிக்கவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் அந்த பகுதியில் பாதுகாப்பு பணிக்காக போலீசாரை நிறுத்த வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
Tags:    

Similar News