செய்திகள் (Tamil News)

பெற்றோரை இழந்த ஏழை மாணவி கட்டணமின்றி நர்சிங் படிக்க உதவி - கலெக்டர் நடவடிக்கை

Published On 2018-11-22 18:10 GMT   |   Update On 2018-11-22 18:10 GMT
பெற்றோரை இழந்த ஏழை மாணவி கட்டணமின்றி நர்சிங் படிக்க கலெக்டர் கந்தசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
திருவண்ணாமலை:

போளூர் தாலுகா வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த கீர்த்தனா என்பவர் கடந்த மாதம் 9-ந் தேதி கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை சந்தித்து, தான் கண்ணமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ இன் நர்சிங் முதலாம் ஆண்டு படிப்பதாகவும், வயதான பாட்டியால் படிக்க வைக்க முடியாத நிலையில் தொடர்ந்து படிக்க உதவிடுமாறும் கோரிக்கை வைத்தார். இதுகுறித்து விசாரணை செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

விசாரணையில், அந்த மாணவி கண்ணமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் படித்து வருவதும், கீர்த்தனாவிற்கு 5 வயது இருக்கும் போது அவரது தாய், தந்தை இருவரும் இறந்துவிட்டதும் அதன் பின்னர் அவரது பாட்டி அம்பிகா, அவரை வளர்த்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து கலெக்டர் கந்தசாமி, கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு மாணவி கீர்த்தனாவின் குடும்ப நிலையினை சொல்லி கட்டணமின்றி படிக்க உதவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதைத் தொடர்ந்து, மாணவி கீர்த்தனா கட்டணமின்றி படிப்பதற்கான பரிந்துரை கடிதத்தினை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, கல்லூரி முதல்வர் ஜெயசூரியா ஜார்ஜிடம் வழங்கினார்.

மாணவி கீர்த்தனா செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களில் இருந்தும் முழுவதுமாக கல்லூரி நிர்வாகத்தால் விலக்கு அளிக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மாணவி கீர்த்தனா, கலெக்டருக்கு நன்றி தெரிவித்தார்.
Tags:    

Similar News