மம்தா அரசை கவிழ்க்க பிரதமர் மோடி சதி- திருமாவளவன் குற்றச்சாட்டு
சென்னை:
உத்தரபிரதேசத்தில் மகாத்மா காந்தியின் உருவ படத்தை துப்பாக்கியால் சுட்ட இந்து மகா சபை நிர்வாகிகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் இந்து மகாசபை நிர்வாகிகளை கைது செய்யக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மகாத்மா காந்தி இந்தியாவின் அடையாளம். இந்து மகா சபை தேசிய செயலாளர் பூஜாசகுன் பாண்டே மற்றும் நிர்வாகிகள் காந்தியை அவமதித்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்று பின்னர் இந்து மகா சபை உறுப்பினராகி காந்தியை சுட்டு கொன்றவர் கோட்சே. அவரது வாரிசுகள் இன்று மீண்டும் ஆயுதங்களுடன் வலம் வருகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பினர்தான் கவுரிலங்கேஷ், கல்புர்சி ஆகியோரை வீடு தேடி சென்று துப்பாக்கியால் சுட்டு கொன்றார்கள்.
மேற்கு வங்காளத்தில் சாரதா சிட் பண்ட் வழக்கில் மம்தாவுக்கு எதிராக சாட்சி சொல்லும்படி சிலர் வற்புறுத்தப்படுகின்றனர். இது வன்மையான கண்டனத்திற்குரியது.
மம்தா சமீபத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக பல்வேறு கட்சி தலைவர்களையும் ஒன்றிணைத்து மாநாடு நடத்தியதே சி.பி.ஐ. ஏவி விடப்பட்டிருப்பதற்கு காரணம். மம்தா பானர்ஜி அரசை கவிழ்க்க பிரதமர் மோடி சதி செய்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சிந்தனை செல்வன், பாவரசு, எஸ்.எஸ். பாலாஜி, வன்னியரசு, இரா. செல்வம், வி.கோ, ஆதவன், செல்லதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். #thirumavalavan #mamata #pmmodi