செய்திகள் (Tamil News)
நெல்லை அருகே 2 வாலிபர்கள் மாயமானது தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள கானார்பட்டி கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் மகன் ராஜா (வயது27), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சூரிய சரோஜினி (25). கடந்த 6 மாதத்திற்கு முன்பு ராஜா, வேலைக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல்கள் கிடைக்க வில்லை. இதைத்தொடர்ந்து சூரிய சரோஜினி மானூர் போலீசில் நேற்று புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ராஜாவை தேடி வருகின்றனர்.
நெல்லை அருகே உள்ள தென்பத்து சித்தன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (30). இவருக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 27-ந்தேதி பாளையில் உள்ள அண்ணா நகருக்கு அவரது சகோதரர் ரவி வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு தங்கியிருந்த பார்த்திபன் திடீரென்று மாயமாகி விட்டார். வீட்டிற்கும் செல்ல வில்லை.
இது தொடர்பாக அவரது தந்தை பாலு, பாளை ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்திபனை தேடி வருகிறார்கள்.