செய்திகள்

தி.மு.க. கூட்டணி 35 தொகுதிகளை கைப்பற்றும்- குஷ்பு கணிப்பு

Published On 2019-02-23 08:12 GMT   |   Update On 2019-02-23 08:12 GMT
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 35 தொகுதிகளை கைப்பற்றும் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். #kushboo #vijayakanth #mkstalin #bjp

சென்னை:

அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா, பா.ம.க. கூட்டணி அமைத்து இருப்பதை தலைவர்கள் விரும்பலாம். மக்கள் விரும்ப மாட்டார்கள். மோடி அரசு சரி இல்லை என்று 4 நாட்களுக்கு முன்பு வரை தம்பித்துரை விமர்சனம் செய்து வந்தார்.

நாங்கள் ஏற்கனவே சொல்லி வந்தோம். அ.தி.மு.க. அரசை பா.ஜனதா தான் இயக்குகிறது என்று. அரசியல் சதுரங்கத்தில் அ.தி.மு.க. வெறும் சிப்பாய் தான். மத்தியில் என்ன சொன்னார்களோ அதைத் தான் எடப்பாடி அரசு செய்து வந்தது.

இப்போது எப்படியாவது நாற்காலியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து இருக்கிறார்கள்.


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அ.தி.மு.க.வுக்கு பூஜியத்துக்கு கீழ்தான் மதிப்பு கொடுக்க முடியும் என்றார். சூடு, சொரணை இல்லாதவர்கள் தான் அ.தி.மு.க.வோடு கூட்டணி வைப்பார்கள் என்று அன்புமணி சொன்னார். இப்போது எதுவும் இல்லாமல் கூட்டணி வைத்து, விருந்தும் வைக்கிறார்கள்.

முரண்பட்ட இந்த கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

தமிழ்நாட்டில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று பா.ஜனதா முயற்சிக்கிறது. அதனால் தான் பா.ம.க.வை விட குறைவாக இருந்தாலும் கூட பரவாயில்லை என்று கூட்டணி சேர்ந்து இருக்கிறார்கள்.

கோட்டா கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை. நோட்டாவை விட குறைவாக ஓட்டு வாங்கினாலும் பரவாயில்லை. எப்படியாவது தமிழகத்தில் நுழைய வேண்டும் என்பதுதான் அவர்களது குறிக்கோள்.

முன்பு தாம்பரத்தை தாண்டினால் தாமரையை தெரியாது என்றேன். இப்போதும் சொல்கிறேன் தமிழகத்தில் எங்குமே தாமரை மலரப் போவதில்லை.

தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்தை சேர்ப்பது பற்றி தி.மு.க.தான் முடிவு செய்ய வேண்டும். விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். ஒரு தலைவர் இந்த மாதிரி சூழலில் இருக்கும் போது தலைவர்கள் போய் பார்ப்பார்கள். எல்லாவற்றையும் அரசியல் கோணத்தில் பார்க்க கூடாது.

எந்த கூட்டணியில் சேருவது என்பதை விஜயகாந்த் முடிவு செய்வார்.

எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி. இந்த கூட்டணி 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும்.

தேர்தலில் நான் போட்டியிடுவேனா, இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் நான் போட்டியிட போவதாக இப்படித்தான் தேர்தல் நேரத்தில் பரபரப்பு கிளம்பி விடும். அதேபோல் தான் இப்போதும் கிளப்பி விட்டுள்ளார்கள்.

நான் எப்போதும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்பதில்லை. ராகுல் என்ன சொல்கிறாரோ அதன்படி நடப்பேன். போட்டியிட சொன்னால் போட்டியிடுவேன். பிரசாரம் மட்டும் செய்ய சொன்னால் பிரசாரம் செய்வேன்.

எங்கள் கூட்டணிக்கு தமிழகத்தில் 35 தொகுதிகளுக்கு மேல் கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.

குறிப்பிட்ட தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற வேண்டும் என்பதல்ல. அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.

இவ்வாறு அவர் கூறினார். #kushboo #vijayakanth #mkstalin #bjp

Tags:    

Similar News