திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பச்சிளங் குழந்தை வீச்சு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி முகமை புதிய அலுவலகம் கட்டிட பணி நடந்து வருகிறது. இதன் அருகே உள்ள புதர் பகுதியில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை வீசி சென்றுள்ளனர்.
புதரில் கிடந்த குழந்தை அழுது கொண்டிருந்தது. கட்டிட வேலைக்கு வந்த பெண்கள் சத்தம் கேட்டு ஓடி சென்றனர்.
குழந்தையை பார்த்த அவர்கள் திடுக்கிட்டனர். குழந்தையின் உடலில் இருந்த தாயின் ரத்தம் கூட காயாமல் இருந்தது. கட்டிட தொழிலாளர்கள் குழந்தையை வாரி எடுத்து அதன்மீது படிந்திருந்த ரத்தம், தூசி ஆகியவற்றை சுத்தம் செய்தனர்.
இதுபற்றி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் குழந்தையை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
குழந்தையை வீசி சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாய் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். அங்குள்ள கேமராக்களில் குழந்தை வீசி சென்றது பதிவாகி உள்ளதா? எனவும் பார்வையிட்டு வருகின்றனர்.