செய்திகள் (Tamil News)
நகை கொள்ளை

கோவை அருகே வீடு புகுந்து கத்திமுனையில் பெண்ணிடம் நகை-பணம் கொள்ளை

Published On 2020-02-28 10:07 GMT   |   Update On 2020-02-28 10:07 GMT
கோவை வீரகேரளத்தில் இன்று காலை வீடு புகுந்து கத்திமுனையில் பெண்ணிடம் நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருன்றனர்.

வடவள்ளி:

கோவை வீரகேரளம் தண்ணீர் தொட்டி வீதி பின்புறத்தில் வசிப்பவர் சுரேஷ் (வயது 41). கோவை தெலுங்கு பிரமாணர் வீதியில் நகைபட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி காயத்ரி (32). இவர்களுக்கு 3-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் உள்ளார்.

இன்று காலை வழக்கம் போல் மகன் பள்ளிக்கு சென்று விட்டார். ரேசன்கடைக்கு செல்ல காயத்ரி இன்று காலை முடிவு செய்தார்.மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்ட அவரது கணவர் காயத்ரியை ரேசன் கடையில் இறங்கி விட்டு சென்றார்.

ரேசன் கடையில் பொருட்களை வாங்கி விட்டு காயத்ரி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து ஒரு வாலிபர் வந்தார். இதை காயத்ரி கவனிக்கவில்லை.

வீட்டின் மேல்மாடியின் கதவை திறந்து ரேசன் பொருட்களை உள்ளே வைத்தார். அப்போது திடீரென வீட்டுக்குள் புகுந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி கழுத்து, கம்மல் கழற்றி கொடு. இல்லை என்றால் நகை பட்டறை நடத்தி வரும் உனது கணவரை கொன்று விடுவேன். பள்ளி சென்ற உனது மகனை கடத்திவிடுவேன் என்று மிரட்டினார்.

அதிர்ச்சியடைந்த காயத்ரி 4 பவுன் செயின், கம்பலை கழற்றி கொடுத்தார். பீரோ சாவியையும் பறித்து பீரோவை திறந்த கொள்ளையன் அங்கிருந்த 2 பவுன் நகையையும் எடுத்தார். பின்னர் இளம்பெண்ணை மிரட்டியவாறே வெளியே ஓடினார். அதிர்ச்சியில் உறைந்த காயத்ரி அலறி சத்தம்போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து விசாரித்த போது கத்திமுனையில் காயத்ரியிடம் நகை பறித்தது தெரியவந்தது. இதனையடுத்து பொதுமக்கள் கொள்ளையனை தேடினர். ஆனால்அவன் தப்பிவிட்டான்.

இது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறை மற்றும் காயத்ரியின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வடவள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News